Thursday, October 28, 2010

சீனு டைம்ஸ்-3

மன்மதன் அம்பு இசை கூடிய விரைவில் சிங்கை நாட்டில் வெளியிட போவதாக செய்தி கேள்விப்பட்டு...ரொம்ப குஷி ஆய்ட்டேன். இது வரை மன்மதன் அம்பு படத்தின் புகைப்படம் ஒன்று கூட வெளி வராததே பெரிய ஆச்சரியமா இருக்கு. ரொம்ப மூளைய கசக்கி யோசித்தாலும் எந்த மாதிரி கதை திரைக்கதை உள்ள படம் என்று ஊகிக்க முடிய வில்லை. முதல் முறையாக தலைவர் படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத்(DSP) இசை(தசாவதாரத்தில் பின்னணி இசை மட்டும் செய்து இருந்தார்). DSP இசையில் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் , பாட்டெல்லாம் கேட்டா துள்ளலாக, நல்ல தரத்தில்(Quality music output) இருக்கும். எப்படியும் தலைவர் ஒரு பாட்டாவது பாடி இருப்பார். Let us Wait and Hear ...

நிற்க, ( உட்கார்ந்து இருக்கறவங்க தயவு செய்து எழுந்துடாதிங்க ப்ளீஸ்...)
அது என்ன இப்ப எல்லாரும் இசை வெளியீட்டை வெளிநாட்டில் நடத்துகிறார்கள்? இந்த அளவுக்கு ஆடம்பரமான விளம்பரம் உண்மையாகவே தேவைதானா?? எவ்வளவு பணம் செலவு ஆகும், அந்த காசுக்கு குறைந்த பட்ஜெட்ல ஒரு படமே தயார் செய்து விடலாம் போல. அதுவும் மன்மதன் அம்பு படத்தின் பட்ஜெட்டில், மூன்றில் ஒரு பங்கு படத்தின் விளம்பர செலவுக்கு உதயநிதி ஸ்டாலின் ஒதுக்கி இருப்பதாக கேள்விப்பட்டேன். அது சரி...பல்லு உள்ளவன் பட்டாணி சாப்பிடறான். நமக்கு தலைவர் படமும் பாடல்களும் வெற்றி பெற்றால் சரிதான்.
****************************************************************************************************
கத்தாரில் WTA சாம்பியன்ஷிப் 2010 டென்னிஸ் போட்டிகள் இந்த வாரம் அக்டோபர்  26ல்  துவங்கி 31ல் முடிவடைகிறது. இந்த போட்டியின் சிறப்பு என்னவென்றால், மகளிர் தரவரிசையில் உள்ள  முதல் எட்டு  பேர்  மட்டும்தான்  ஆடுவார்கள். எனவே, நல்ல சிறப்பான போட்டித்தொடர் இருக்கும். வில்லியம்ஸ்  சகோதரிகள் விலகி கொண்டதால், இன்னும் ரெண்டு பேர் 9, 10ல இருந்தவங்க வந்துட்டாங்க. ஜெயிச்சா ஏழு  கோடி  பரிசு...!!! இங்க கீழ இருக்கற 8 அம்மணிகள் தான் விளையாடறாங்க...(ஒரு அம்மணி மட்டும் புகைப்படம் எடுக்க வரலை, விமானம்  தாமதமோ !!!) 
ஊருக்கு போற ஜோர்ல இந்த போட்டிக்கு நுழைவுச்சீட்டு வாங்க மறுந்துட்டேன். நம்மளுக்கு ரொம்ப புடிச்ச கிம்  கிளிஜ்ச்டேர்ஸ் வேற ஆடுவதால் என்னடா பண்றது... டிக்கெட் எதுவம் இல்லையே என முழிச்சிகிட்டு இருக்கும்  போது அபத்பாந்தவனா  என்னோட  இந்தோனேசியா நண்பர் அவர் அரை இறுதி ஆட்டத்துக்கு  வாங்கிய  நுழைவுச்சீட்டை எனக்கு கொடுத்துட்டார். நான் ஏன் முக்கியமா கிம் கிளிஜ்ச்டேர்ஸ் விளையாடறத   பாக்க போறேன்னா, அந்த அம்மணி கல்யாணம் பண்ணி அவருக்கு குழந்தை பிறந்த பிறகு மறுபடியும் விளையாட வந்து இரண்டு முறை கிராண்ட் ஸ்லாம் வென்று இருக்காங்கா... எவ்வளவு கடினமான விஷயம்....?? ஸ்டெபிக்கு அப்புறம் கிம்தான் எனக்கு ரொம்ப பிடிச்ச டென்னிஸ் வீராங்கனை. எப்படியாவது கிம் அரை இறுதிக்கு வந்துடுவாங்க  என்ற நம்பிக்கையில் சனிக்கிழமை வரை  காத்திருக்கிறேன். போன வருஷம்,  எனக்கு மிகவும் பிடித்த ரோஜர் பெடரரை இங்கு நேரில், அவர் விளையாட  பார்த்ததே பெரிய  சந்தோஷம். எப்படியும் கிம்மையும்  நேரில் பார்த்துட்டு  வந்து  அடுத்த பதிவில் விவரிக்கிறேன். 

                                          
****************************************************************************************************

பத்து பேரை அடிக்கும் நோஞ்சான் நடிகர்-என்னிடம் மோதத் தயாரா?
சின்ன அய்யா அன்புமணி சவால்! சவால்! சவால்!
 ஒரு நோஞ்சான் நடிகர் 10 பேரை அடிக்கிறார். அவருக்கு உண்மையிலேயே சண்டை போடத்தெரியாது . உண்மையிலேயே சண்டை போட வேண்டுமென்றால் என்னிடம் வரட்டும், நான் வெற்றி பெற்று காட்டுகிறேன். எனக்கு டூப் போடத் தெரியாது. தமிழகத்தில் உண்மையான கதாநாயகன் டாக்டர் ராமதாஸ்தான் என்றார் அன்புமணி. - போன வாரத்திய செய்தி இது.
 
உண்மைதான், மருத்துவர் அய்யா ராமதாஸ் தான் தமிழகத்தின்  உண்மையான கதாநாயகன், ஏன்னா அவர்தான் ராஜ்யசபா எம்.பி சீட்டுக்கு  கழக கட்சிகளோடு முட்டி மோதி பார்த்து சண்டை போடறாரே. அப்புறம் சின்ன அய்யாகிட்ட யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன், ஆறு மட்டும் எட்டு பேக் வச்சி இருக்கிற நடிகர்களான சல்மான் கான், ஆமிர் கான் எல்லாம் கூட டூப் போட்டுத்தான் சண்டை காட்சியில நடிக்கறாங்க, அவங்க கிட்டயும் இதே பஞ்ச ரிப்பீட்டலமா (Repeat)  என? என்ன கொடுமையா இது, சினிமா எடுக்கறவன் எல்லாம் சண்டை காட்சியில டூப்  போட்டுதான்யா எடுப்பான். இப்படியே, அடுத்து காதல் காட்சி, கற்பழிப்பு காட்சி எதுவும் அந்த நடிகர்களுக்கு பண்ணத்தெரியல, எங்கிட்ட வர சொல்லு, நான் எப்படி பண்ணி காட்டுறேன்னு சொல்லுவாரோ???
****************************************************************************************************
.

Wednesday, October 20, 2010

"அண்ணா"ந்து பார் !!!

தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய இரு பெருந்தலைவர்கள் சி.என்.அண்ணாதுரை மற்றும் காமராஜர் அவர்கள். நெடுநாளாய் இவர்களை பற்றிய வாழ்க்கை வரலாறு படிக்க ஆவலாய் இருந்தேன். போன விடுமுறையில் தென்காசிக்கு நண்பன் கல்யாணத்திற்கு போன போது, திருநெல்வேலியில் ரயில் ஏறும் முன்பு, செஞ்சுரி புத்தகக்கடையில் என்.சொக்கன் எழுதிய "அண்ணா"ந்து பார்! புத்தகமும் வாங்கினேன்.

சின்ன வயதில் நான் வளர்ந்த காலத்தில் அதிகம் பார்த்த கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் அண்ணா அவர்கள் பேர் சொல்லியேதான் அன்றிலிருந்து இன்றுவரை அரசியல்
செய் - தார்கள், கின்றார்கள், வார்கள். தமிழக அரசியலில் அண்ணா அவர்கள் ஏற்படுத்திய மாற்றம் வியக்கத்தக்கது, 1967ல் அண்ணா அவர்களால் ஆட்சி  இழந்த  தேசிய கட்சியான காங்கிரஸ் இன்று வரை தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லை, அண்ணா அவர்கள் போட்ட அஸ்திவாரம் அப்படி. அண்ணாவின் மறைவிற்கு பிறகு, இன்று வரை அவர் தோற்றுவித்த தி.மு.க மற்றும் அவர் பெயரால் தோற்றுவிக்கப்பட்ட  அ.தி.மு.க.  மட்டும்தான் தமிழகத்தில்  ஆட்சி செய்கின்றனர்.

புத்தகம் அண்ணா மற்றும் பெரியார் இருவரிடையே ஏற்பட்ட முதல் சந்திப்பிலிருந்து தொடங்குகிறது, தொடர்ந்து அண்ணா அவர்களின் பிறப்பு, பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, அரசியல், பேச்சு மற்றும் எழுத்து பணி பிறகு அரசியல் களம் என விரிகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த களத்தில் இருந்த அரசியல் கட்சிகள், பெரியாரிடம் அண்ணா கொண்ட ஈடுபாடு, ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டங்கள், பெரியாரிடம் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து தனி கட்சி தொடங்கியது, பத்திரிக்கைகள் மற்றும் நாடகங்கள் நடத்தியது, தனி திராவிட நாடு கோரிக்கை, தி.மு.க தேர்தலை சந்தித்த விதம், காங்கிரசை தோற்கடித்து ஆட்சிக்கு வந்தது என நிறைய பல நிகழ்வுகளின் கோர்வையாக உள்ளது.

பெரியாரிடம் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கடைசி வரை அண்ணா பெரியாரை எந்த சமயத்திலும் விட்டு கொடுத்ததே இல்லை, பெரியார் அண்ணாவை இகழ்ந்து பேசியும் கூட. புத்தகத்தில் அண்ணா அவர்களின் குறைகள் பற்றி எதுவும் பெரிசா இல்லை...சும்மா கண்துடைப்புக்கு கொஞ்சம் இருக்கு.

அண்ணா வாழ்க்கை பற்றிய இந்த புத்தகத்தில், இன்றைய முதல்வர் பெயர் ஒரு சில இடத்தில் வருகிறது...எங்கோ ஒரு ஓரத்தில் இருந்தவர், அண்ணாவின் மறைவுக்கு பிறகு பல பேரை காலி செய்து விட்டு முதல்வர் ஆகி விட்டார், இன்று வரை யாரையும் அவரை மீறி வளர விடாம பார்த்துகிட்டு இருக்கார். எதற்கெடுத்தாலும் அண்ணா பேர் சொல்லும் திராவிட கட்சிகள் அண்ணா செய்த மற்றும் செய்ய நினைத்த நல்லாட்சியில் கொஞ்சம் கூட இது நாள் வரை செய்யவில்லை, அப்புறம் என்ன அண்ணா நாமம் வாழ்க, அண்ணா மூன்றெழுத்து, தி.மு.க மூன்றெழுத்துன்னு கதைய விட்டுகிட்டு...!

புத்தகம்

ஆசிரியர் : என்.சொக்கன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள் : 184
விலை : 90
வருடம் : 2007
https://www.nhm.in/shop/978-81-8368-006-6.html

கிழக்கு பதிப்பகத்தின் வலைத்தளத்தில் இந்த புத்தகத்தை பற்றி எழுதி இருப்பதை போல், கடல் போன்ற அண்ணாவின் வாழ்கை வரலாற்றை விழுங்கிய ஒரு குடம் தான் இந்த புத்தகம். இன்னும் நிறைய எழுதிருக்கலாமோ என தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.எனக்கு புத்தகம் ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை தந்தது. எனக்கு வாழ்கை வரலாறுகள் படிக்க ரொம்ப பிடிக்கும், பொதுவாக எல்லாருக்கும் அப்படித்தானே.(அடுத்தவங்க கதையென்றால் நம்மதான் வாய பொளந்து கேட்டுகிட்டு இருப்போமே !!!)
.

Friday, October 8, 2010

சீனு டைம்ஸ்-2

போன வாரம் இங்க ஒரு ஷாப்பிங் மால் போயிருந்தேன்.... நல்ல கூட்டம்.... வண்டி நிறுத்திட்டு உள்ள போகவே ஒரு கால் மணி நேரம் ஆகி விட்டது. நண்பனோட சும்மா துணைக்கு போனதால் நான் வேடிக்கை பார்த்துக்கிட்டு  அவர் கூட சுத்திகிட்டு இருந்தேன். பிங்க் நிற உடையில் ஒரு அழகான குழந்தை பார்த்தேன்...ஒரு இரண்டு வயசு இருக்கும். ரொம்ப அழகா சிரிச்சிகிட்டு இருந்துச்சி...சில வினாடிகள் அந்த குழந்தை கூட சிரிச்சி வேடிக்கை காட்டிவிட்டு தள்ளி போயிட்டேன். மறுபடியும் வாங்கிய  பொருள்களுக்கு விலை போடும் நேரத்தில் அதே பாப்பா சிரிச்சிகிட்டே தனியே வெளியே நடந்து போச்சு. அப்படியே அந்த மால் கார்ரிடர் தாண்டி வெளியே கார்கள் நிறுத்தம் வரை சென்று விட்டது. எல்லாரும் பார்த்துகிட்டே இருக்காங்க..ஒருத்தரும் குழந்தையை தூக்கவில்லை. அடுத்து பிரதான சாலையில் செல்ல அந்த பாப்பா எத்தனிக்கையில், இதுவரை அந்த குழந்தை பின்னாடியே சென்ற  நான் இதற்கு மேல் வேலைக்காகாது என நான் அந்த குழந்தையை தூக்கினேன். அம்சமா சிரிச்சிகிட்டே என்கிட்டே வந்துட்டாங்க. நேராக கஸ்டமர் கேரில் சென்று பதட்டத்தோட, "குழந்தை யாருடையது என்று தெரியவில்லை,  தனியாக சுத்திகிட்டு இருக்குனு, கொஞ்சம் மைக்ல அறவிப்பு கொடுங்கன்னு சொன்னேன்".  அங்க இருந்த பெண்மணி கொஞ்சம் கூட அச்சமோ/பதட்டமோ இல்லாம அந்த குழந்தைய கொஞ்ச ஆரம்பிசிட்டாங்க. அவங்க கூப்பிட்டும் என்னிடம் இருந்து போக மறுத்து விட்டது அந்த பாப்பா. ஒரு வழியா மைக்ல அறிவிப்பு செஞ்சாங்க. கொஞ்ச நேரம் கழித்து, ஒரு சலனமோ/பதட்டமோ இல்லாம ரொம்ப ஜில்லுனு(cool a) என்னை நோக்கி ஒருத்தர் வந்தார், குழந்தையை அழைப்பது போல் கைகளை நீட்டினார். "இது  உங்க குழந்தையா" என்ற எனது கேள்விக்கு, வாயை  திறந்து  ஆமாம்னு கூட சொல்லலை..., நான் கேட்ட கேள்விக்கு அமோதிப்பது போல தலையை மட்டும்  ஆட்டிட்டு குழந்தையை தூக்கிகிட்டு போய்கிட்டே  இருந்தார், அந்த கஸ்டமர் கேர் பெண்மணி அவங்க திரும்பி அவங்க வேலைய செய்ய ஆரம்பிச்சிட்டாங்க....நான் மட்டும் "ங்கே"  னு முழிச்சபடி  பார்த்துகிட்டே  இருந்தேன். நான் ரொம்ப பெரிய  செண்டிமெண்ட் சீன் எதிர்பார்த்தா, இப்படி ஆயிடுச்சுன்னே  பார்கையில், அப்புறம் தான் விளங்கிச்சு....இந்த மாதிரி பெரிய மால்களில்  இதெல்லாம் தினசரிகள் போல என.....! ஆனா அந்த குழந்தையோட அப்பா ஒரு சின்ன நன்றி சொல்லி இருக்கலாமோ என என் சின்ன மனசு  நினைச்சிச்சு..... (ஏன்னா நானும் சராசரி மனிதன் தானே(வேணும்னா என் profile பார்த்துக்குங்க)..... என்ன உலகம்டா சாமி !!!)
****************************************************************************************************
சமீபத்தில் நான் ரொம்ப ரசித்து பார்த்த வீடியோ. ஏற்கனவே ஒரு பிரபல பதிவர் இந்த வீடியோவை ரொம்ப நாள் முந்தி அவர் பதிவில் வெளியிட்டு  இருந்தாலும், என்னோட வட்ட்டதில் உள்ள நண்பர்களுக்காக ....இதோ அந்த காட்சி....        
கடைசியா, ரஜினி அவர்கள் பேசி முடிக்கும் போது, "Thank you very much Aishwaryaji" னு சொல்லும் போது...எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.... Simplicity, Thy name is Rajinikanth.
****************************************************************************************************
எங்க கம்பெனில, போன மாதம் ஒரு ISO Refresher கோர்ஸ் போயிருந்தேன். கோர்ஸ் எடுத்தவர் ரொம்ப அழகா, தெளிவா எல்லாரையும் ஈடுபடுத்தி நடத்தி கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில், தவறுகள் பத்தி பேசுகையில் என்னை பார்த்து கேட்டார், நீ எவ்வளவு சதவிகிதம் உன் வேலைல தப்பு செய்வே என்று கேட்டார்?. நான் கொஞ்சம் உணர்ச்சி பெருக்கில் ஒரு 2 சதவிகிதம்னு சொன்னேன். இது உங்க கம்பெனிக்கு அதிகம்னு சொன்னார். நான் 2 சதவிகிதம்தானே என்றேன். அவர் உடனே, உங்க கம்பெனில இருக்குற 2000 பேரும் 2 சதவிகிதம் தப்பு பண்ணா?? தப்பா என்றார். இவரு எப்படா அந்நியன் படம் பார்த்தார்னு நினைச்சேன். சொல்ல வரது என்னன்னா, அவர் இந்த மாதிரி கேட்ட உடனே வாத்தியார் சுஜாதா ஞாபகம் வந்துடுச்சி. அந்நியன் படத்தோட மொத்த கருத்துமே இந்த கீழ்கண்ட வரிகளில் அடங்கி விடுகின்றது. அதுதாங்க சுஜாதா.

அந்நியன் : "5 பைசா திருடினா தப்பா ?"

சொக்கன் : "தப்பா தெரியலை சார் !"

அந்நியன் : "5 கோடி பேர் 5 பைசா திருடினா தப்பா ??"

சொக்கன் : "தப்பு மாதிரி தெரியுது சார் !!"

அந்நியன் : "5 கோடி பேர் 5 கோடி தடவை 5 பைசா திருடினா தப்பா ???"

சொக்கன் : "பெரிய தப்பு சார் !!!"

இப்ப சமீபத்தில் கூட ஒரே ஒரு துரோகம் என்ற வாத்தியார் எழுதுன புத்தகம் படித்தேன். கதை முழுக்க இருவரின் பார்வையில் மாறி மாறி அத்தியாயங்கள் எழுதப்பட்டு இருக்கும். (விருமாண்டி திரைக்கதை பாணி, இந்த கதை எப்பவோ எண்பதுகளில் எழுதப்பட்டது). காலத்தில் எவ்வளவு முந்தி இருந்தார் வாத்தியார் சுஜாதா?? ஆகையால் தான் இறப்பிலும் முந்தி விட்டார் போல!!! வாத்தியார் இன்னும் நம்மோட இருந்திருந்தால் எந்திரன் இரண்டாம்  பாகம் கண்டிப்பா இப்ப இருக்கறத விட நல்லாவே வந்து இருக்கும். கடவுள் யார் என்று எந்திரன் படத்தில் ரோபோவை பார்த்து கேட்கப்படும் கேள்விக்கு வரும் பதில் அட்டகாசம். எத்தனை முறை வேண்டும் என்றாலும் சொல்வேன், எல்லா பதிவிலும் எழுதுவேன்... "We Miss U வாத்தியாரே...!!!
****************************************************************************************************

Friday, October 1, 2010

எந்திரன் - ஒரு மைல்கல்

எந்திரன் - துவக்க காட்சியில் தாடியுடன் ஒரு விஞ்ஞானி ரோபோவை உருவாக்கி கொண்டு இருப்பார்...கிட்ட பார்த்தால்..அட ரஜினிகாந்த். இதுதாங்க படத்தில் ரஜினி அவர்களின் அறிமுகம். இங்க இருந்து முழுக்க முழுக்க ஷங்கரோட ராஜ்ஜியம் தான். சமீப காலங்களில் ரஜினி அவர்களின் சிறந்த உழைப்பை வெளி கொணர்ந்தவர் ஷங்கர் மட்டுமே...எந்திரன் ரஜினி அவர்களின் உழைப்பின் உச்சம். திரை அரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டமும் உச்சமே.

விஞ்ஞானி ரஜினி (வசீகரன்) அவர் 10 வருடம் உழைத்து உருவாக்கும் ரோபோ (இதுவும் ரஜினி தான்), கண்டுபிடிப்புகளின் உச்சம். சிட்டி என்று பெயரிடப்படும் இந்த ரோபோ மனிதனை போல் கோபம்,காதல், துக்கம் இன்ன பிற உணர்சிகள் இல்லாது சொல்கின்ற எல்லா வேலையும் செய்யும்...அதுவும் மின்னல் வேகத்தில். ஐஸ்வர்யா ராய்(சனா), வசீகரனின் காதலி, மருத்துவ கல்லூரி மாணவி. சந்தானம் மற்றும் கருணாஸ் வசீகரனின் ஆராய்ச்சி கூடத்தில் வேலை செய்பவர்கள்.
சிட்டி ரோபோவை ராணுவத்தில் பணிக்கு அமர்த்தி ஆயிரம் வீரர்கள் செய்கின்ற வேலையை ஒரு ரோபோவின் மூலம் செய்ய வைப்பதே வசீகரனின் இலட்சியம். இதற்காக நடக்கும் பரிசோதனையில், சில மூத்த விஞ்ஞானிகள் முன்னிலையில் சிட்டியை அனைவரும் ஒப்புகொள்ள, ஒரு விஞ்ஞானி போரா(டேனி-வில்லன்) மட்டும் அதை சில பரிசோதனைகள் செய்து, சிட்டியை குழப்பமான கட்டளைகள் கொடுத்து தவறான செயல் செய்ய தூண்டி நிராகரித்து விடுகிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம், சிட்டி யார் எது சொன்னாலும் சொன்னதை, நல்லது  கெட்டது பாராமல், மனித உணர்சிகளை உணராது வேலை செய்யும் ஒரு இயந்திரம்...அவ்வளவே. இதனால் கோபம் அடையும் வசீகரன் மறுபடியும் உழைத்து, தாடி வளர்த்து ....சிட்டிக்குள் அனைத்து மனித உணர்ச்சியும் வரும்படி செய்கிறார். இதை, ஒரு கடினமான பிரசவத்தை, மிக லாவகமாக செய்வதின் மூலம் சிட்டி உலகக்கு தன்னை நிரூபிக்கிறது. சந்தோஷத்தில் சனா சிட்டியை முத்தமிட போக, சிட்டிக்கு  சனா மீது காதல் பிறக்கிறது. இதனால் வசீகரனுக்கும் சிட்டிக்கும் வாக்குவாதம் வர, சனா தான் வசீகரனைதான் காதலிப்பதாகவும்,இயந்திரத்தோடு வாழ்வது சாத்தியம் இல்லை என தன்  நிலைபாட்டை தெளிவாக சொல்லி விட சிட்டி வருத்தம் கொள்கிறது. இதனால், அடுத்து ராணுவ உயர் அதிகாரிகள் முன் நடக்கும் பரிசோதனையில் சிட்டி வேண்டும் என்றே காதல் வசனம் பேசி சொதப்பி விடுகிறது. இதனால் அவமானம் அடையும் வசீகரன் கோபத்தில் சிட்டியை துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசி விடுகிறார். குப்பையில் இருந்து சிட்டியை மீட்க்கும் போரா, அதற்கு உயிர் கொடுத்து அதற்குள் தீய சக்திக்கான சிப்பை சொருகி, சிட்டியை அசூர ரோபாவாக மாற்றி விடுகிறார். கொடுறுமான  வேகத்துடன் கிளம்பும் ரோபோ சனாவை கடத்திவிடுகிறது, போரவையும் கொன்று விடுகிறது. பலரை  கொன்று தீய, நாச வேலைகளில் ஈடுபடும் ரோபோவை, எப்படி வசீகரன் அடக்கி சனாவை மீட்கிறார் என்பதே இறுதிகட்டம்.


படம் முழுக்க ரஜினி..ரஜினி...ரஜினி தான்....இந்த வயதில் அவரின் உழைப்பு அதிசயக்க வைக்கிறது. அதுவும் இரண்டாம் பாகத்தில் கெட்ட ரோபோவாய் மாறிய பிறகு....அசத்தல் ரஜினி...அதே மூன்று முகம் அலெக்ஸ் நடை...அந்த அசத்தலான சிரிப்பும்...யார் அந்த கருப்பு ஆடு என்று சொல்லி ஆடு மாதிரி கத்தும் இடத்தில... சூப்பர் ஸ்டார் ஜொலிக்கிறார். காதல் அணுக்கள் பாட்டில் மிக மிக அழகாய் இருக்கிறார் ரஜினி. இதற்காகவே ஷங்கருக்கு ஸ்பெஷல் சல்யூட். மத்த இயக்குனர்கள் சமீபத்தில் ரஜினியை இந்த அளவுக்கு அழகாய் கட்டியதே இல்லை..முக்கியமாக வாசு. ஐஸ்வர்யா ராய் சில close-up காட்சிகள் தவிர படம் முழுக்க அழகாய் பவனி வருகிறார். இரும்பிலே ஒரு இருதயம் பாட்டில் செம ஆட்டம் ஆடி இருக்காங்க. சந்தானம், கருணாஸ் சிரிக்க வைக்க முயற்சி செய்றாங்க...சில one-liners தவிர சிரிப்புதான் நமக்கு வரவே மாட்டேங்குது. வில்லன் டேனி திடீர்னு பரிதபாமா செத்து போறார். கொச்சின் ஹனிபா மற்றும் கலாபவன் மணி கொஞ்ச நேரமே வந்தாலும் கலக்கி இருப்பாங்க.

இந்திய சினிமா வரலாற்றில், தொழில்நுட்பத்தின் உச்சம் எந்திரன் தான். முதலில் ஷங்கருடைய உழைப்புக்கும், திட்டமிடுதலுக்கும் ஒரு பெரிய சபாஷ். இந்தியாவில், இந்த அளவிற்கு தொழில்நுட்பத்தை யாரும் பயன்படுத்த வாய்ப்பு மிக குறைவு. சுஜாதா அவர்களின் வசனங்கள் அருமை. நிறைய இடங்களில் வரும் one-liners superb. என்ன நக்கலா என்று காவல் அதிகாரி சிட்டியை கேட்க, இல்ல நிக்கல் என்று சொல்லும் வசனம் அற்புதம்...முதல் பாதி முழுக்க இந்த மாதிரி நிறைய வசனங்கள். படத்தில் முக்கியமாக சனாவுடன் சிட்டி செல்லும் அந்த இரண்டு நாட்கள்..அதகளம். முக்கியமாய் அந்த குப்பத்து காட்சி...படத்தின் அற்புதமான இடம் திரை அரங்கே அதிருகிறது.... . ராணுவ அதிகாரிகள் முன்பு சிட்டி சொல்லும் கவிதை அழகு...' கணிபொறியும் காதலிக்க வைக்கும் கன்னிபொறி' என்று ஆரம்பித்து அசத்தி இருக்கார் நா.முத்துக்குமார். நான் படம் பார்த்த திரை அரங்கு மிக கேவலமாக இருந்ததால் ரஹ்மானின் பின்னணி இசை பத்தி பெரிதாக கேட்க முடிய வில்லை. நம்ம ஊர்ல நல்ல திரை அரங்கில் பார்த்துட்டு சொல்றேன். ரத்னவேலின் ஒளிப்பதிவு படத்தின் மிக பெரிய பலம். கிளிமஞ்சாரோ பாடலில் வரும் பின்னணி காட்சிகள் அற்புதம்.சாபு சிறிலின் பங்களிப்பு நிறைய....சில காட்சிகள் நடிக்கவும் செய்து இருக்கார்.

நிறைய இடத்தில ஷங்கரின் புத்திசாலித்தனம் ஒளிர் விடுகிறது....சின்ன சின்ன காட்சிகளுக்கும் அபாரமாக உழைத்து இருக்கிறார். படத்தில் மைனசே இல்லையே என்றால்..கண்டிப்பாக இருக்கிறது....எப்பவும் போல ஷங்கரின் படங்களில் மீறப்படும் லாஜிக் அபத்தங்கள் இதிலும் உண்டு....ஜென்டில்மேன், பாய்ஸ், அந்நியன் போல இந்த படத்திலும் இறுதி காட்சியில் நீதிமன்றம் வந்து விடுகிறது...இரண்டாம் பகுதியில் நிறைய இடங்களில் தொய்வு தெரிகின்றது..அதுவும் காவலர்கள் துரத்தும் அந்த காட்சியும், இறுதியில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளும் ரொம்ப நீளம்...அஆவ் .. இறுதிக்காட்சிகளில் வரும் கிராபிக்ஸ் பார்க்கும் பொது ஜெடிக்ஸ் பாக்கிற மாதிரியே இருக்கு....இராம நாராயணன் படங்களில் வரும் கிராபிக்ஸ் குறைந்த தரம் ..அவ்வளவே....வித்தியாசம்... அந்த காட்சிகள் அவ்வளவு நீளம் தேவை இல்லை என்பதே எனது எண்ணம்....

மத்தபடி...கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்தான் 'எந்திரன்....'
.